பிரபல சிங்களப் பாடகர் இராஜ் மீது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அண்மையில் இராஜினால் வெளியிடப்பட்ட ”மனுசதா” என்ற பாடல் தொடர்பிலேயே இந்த விசாரணை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜை விசாரிக்குமாறு நேற்று (11) கொழும்பு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இராஜ் மீதான விசாரணைக்கான உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
மேலும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பானது புத்தரை அவமதிக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்தே அந்த அமைப்பின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இராஜினால் வெளியிடப்பட்டுள்ள பாடலில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், இவை மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையிலான பாடல் என்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஸிக் நீதவானிடம் தெரிவித்தமைக்கு அமைவாகவே இராஜை விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்தப் பாடலை தடைசெய்யுமாறும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமது அமைப்பானது பல வருடங்களுக்கு முன்பு தவறுதலாக புத்தரை அவமதிக்கும் வகையில் நடந்துக் கொண்டதாகவும், பின்னர் அந்த விடயம் தங்கள் அமைப்பால் வாபஸ் பெறப்பட்டதாகவும் அப்துல் ராஸிக் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.