மன்னாரில் சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

  மன்னாரில் அண்மை காலங்களாக சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். ,

குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக வும் அவர் தெரிவித்தார், இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 விசேட பாதுகாப்பு நடவடிக்கை

மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயன்றதாக மாணவர் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இன்று (8) காலை பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.

இதன் போது மேலும் ஒரு மாணவனை இன்று காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொலிஸாருக்கு அறிவியுங்கள்

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடியாக, மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதோடு மாணவர்கள் கவனம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். குறித்த சம்பவங்கள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் பொதுமக்கள் அது தொடர்பில் உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தினார்.