பிரத்தியேக வகுப்புக்குச் சென்று காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு!

   காணாமல்போன அம்பாறை-  கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றார்கள்.

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் மாயம் 

துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு திங்கட்கிழமை மாலை சகோதரியினால் மீட்கப்பட்ட குறித்த காணாமல் சென்ற மாணவன் தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை தலைமையக பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம்-10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய உடையார் வீதியைச் சேர்ந்த துஸ்யந்தன் டேவிட் தக்சிதன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோரினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 காணாமல் சென்ற மாணவன் சக மாணவர்களிடம் பாடசாலையை விட்டு பிற்பகல் 1 மணியளவில் பிஸ்கட் வாங்குவதாக கூறி துவிச்சக்கரவண்டியுடன் வெளியேறி செல்வது சிசிடிவி கமரா காணொளிகளில் அவதானிக்கப்பட்ட நிலையில் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களிலும் காணாமல் சென்ற மாணவன் தொடர்பான தகவலுடன் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் காணாமல் போன மாணவனது சகோதரி திங்கட்கிழமை மாலை கல்முனை பகுதிக்கு வருவதற்கு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனது சகோதரன் தனிமையில் இருப்பதை உறுதிபடுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய உறவினர்கள் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக கொழும்பு நோக்கி உறவினர்களுடன் கல்முனை தலைமையக பொலிஸார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.