தமிழின படுகொலை நினைவுநாள் அனுஷ்டிப்பு!

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு நீங்கவில்லை.

இன்று மே18 சிங்கள காடையர்களால் மிகக்கோடூரமாக அரங்கேற்றப்பட்ட எம் இனத்தின் அழிப்பு நாள். தாயக பகுதியெங்கும் தமது உறவுகளை இழந்த உறவுகள் கண்ணீரில் கரைகின்றனர்.

ஊர்திப் பவனி
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.

ஊர்திப் பவனி ,முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணினை எடுத்து தொடங்கியது.

இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆறாவது நாள் பயணம் புதன்கிழமை (17) காலை வரணி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமானது.

இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம் பளை பரந்தன் தர்மபுரம் விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை வந்தடைந்துள்ளது. தமிழ் இனப்படுகொலை ஊர்திக்கு பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர் .

தொடர்ந்து இன்று (18) காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்தி பவனி மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் வாகன பேரணியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது.