உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு!

  கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர்  இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்  உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்ததாகக் கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

அதற்கமைய, நேற்று காலை உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது, ​​வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் ஊன்றுகோல் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் காணப்பட்டன.

நீர்ச்செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளார். அப்போது அவரின் உடல் மிதப்பதனை அவதானித்துள்ளார்.

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர், விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகளும் அங்கு கூடியிருந்தனர்.

காலை 10 மணியளவில், அந்தப் பெண்ணின் தலை அசைவதை பார்த்த உள்ளூர்வாசிகள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கையையும் கவனத்தில் கொண்டு இருவர் துணிந்து  பெண் இருந்த இடத்தை நெருங்கியுள்ளனர்.

அந்த இடத்தை அடைந்தவுடன், இறந்துவிட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்தது. அவரது மகனும் பிரதேசவாசிகளும் அவரை கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது தாயின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த பெண்ணின் வீடு இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.