இலங்கையில் நடமாடும் விபச்சார நிலையத்தை நடாத்தி வந்த நபர்கள் கைது!

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட எழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நால்வர் அவர்களை வாடகை வாகனத்தில் அமர்த்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

பிரதான சந்தேகநபர்

பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட மொரட்டுவையை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்கும் மேற்படி நபர், நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு மூலோபாயத்தை கையாண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு பெண்ணொருவரை பொலிஸார் விலைபேசியுள்ளனர்.

அதனடிப்படையில் சந்தேகநபர், சனிக்கிழமை (20) இரவு நான்கு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர், பல வருடங்களாக விபசார வியாபாரத்தை நடத்திச் சென்றுள்ளார்.

அதனூடாக பெருந்​தொகையான பணத்தை அவர் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.