விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ள குமார் பிள்ளையை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மும்பாயின் புதிய பொலிஸ் ஆணையாளர் வழங்கிய தகவல்களே குறிப்பிட்ட சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ள மும்பாய் பொலிஸார், ஜனவரி மாதம் முதல் தாங்கள் குமார்பிள்ளையை கண்காணித்து வந்ததாகவும், சோதனை நடவடிக்கையின் போது தப்பிய குமார் பிள்ளை, சிங்கப்பூரிற்கு தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தாங்கள் வழங்கிய தகவலையடுத்தே அவர் ஐந்து வாரங்களிற்கு முன்னர் கைதுசெய்யபட்டார். அவரிற்கு எதிராக ஐந்து பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரை நாடுகடத்துமாறு கோரும் வேண்டுகோளை சிங்கப்பூரிற்கு அனுப்பியுள்ளோம் என மும்பாய் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.