நாட்டின் மின் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாத விடத்து, எதிர்வரும் நாட்களில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீர்மின் உற்பத்தி குறையும் போது இந்த மின்வெட்டு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இக்குழு மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர், மின்சாரத்தை தடையின்றி கொண்டு செல்வதில் கண்டறியப்பட்ட பல்வேறு தடங்கல் குறித்து அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
சில மின் உற்பத்தி உப நிலையங்கள் இன்னும் பழைய நிலையில் காணப்படுவதுடன், பலவீனமடைந்து காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிக்கையில், மின்சாரத் தடைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.