யாழில் இன்று அதிகாலையும் ஒரு கொரோனா மரணம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்று விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

துன்னாலை தெற்கு வேம்படி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் நோய் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற மூதாட்டிக்கு நேற்று இரவு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து இரவு 10 மணிக்கு கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே தொற்றாநோயால் பீடிக்கப்பட்டவர் ஆவார்.

இவரின் சடலம் யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, துன்னாலை தெற்கு வேம்படி ஆட்டுப்பட்டி கிராமத்திலிருந்து மேலும் ஒருவர் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், யாழ் மாவட்டத்தில் நேற்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலை சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்தார்.