கைக்குழந்தையுடன் யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணொருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருந்தொகையான போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புல்மோட்டை நோக்கி பயணித்த பேருந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் சோதனையிட்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 777 போதை மாத்திரைகள் மற்றும் 60 கிராம் கஞ்சாவை எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.