யாழ் நெடுந்தீவு கொலை தொடர்பில் தீவிரம் காட்டும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இன்று இரக்கமின்றி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதோடு சம்வம் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஐவர்  படுகொலை

நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு அண்மையில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இன்று இடம்பெற்ற கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் இதன்போது பிரதிப் பொலிஸ்மா அதிபடிடம் அமைச்சர் டக்லஸ் வலியுறுத்தியுள்ளார்.