மட்டக்களப்பில் பேத்தை மீனை உண்டமையால் இளம் தாய் உயிரிழப்பு! மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

  மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மூவர் மருத்துவமனையில்

குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியுள்ளனர்.

இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 27 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.