கனடாவில் இருந்து திருமணத்திற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

  கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் பலி

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாகவும், விபத்தில் சிக்கிய ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் சனிக்கிழமை மாலை இந்தக் கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW 220) பழுப்பு நிற மேர்சிடஸ் (Mercedes C200) ஆகிய இரண்டு கார்கள் மோதிய விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

மற்றைய காரில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல்களைச் சசெக்ஸ் பொலீஸார் வெளியிட்டுள்ளனர்.

உதவி கோரியுள்ள  பொலிஸார்

சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உயிரிழந்துள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாகவும் லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.