பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவனிடம் ஏ4 தாளினை கொண்டு வருமாறு கூறியும் அவர் கொண்டு வராமை காரணமாக அதிபர் மாணவனின் முதுகில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் அது குறித்து வினவியுள்ளனர். இதன்போது அதிபர் தாக்கியமை தொடர்பில் பெற்றோரிடம் மாணவர் கூறியுள்ளார்.

அவரை அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனையடுத்து பெற்றோர் சம்பவம் தொடா்பில் பங்கம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த அதிபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.