ராஜபக்சக்களை மக்கள் முன்னிலையில் கூண்டோடு தூக்கிலிட வேண்டும் -சரத் பொன்சேகா

இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“தனி நாடு கோரி போரிட்ட விடுதலைப்புலிகளை அழித்த பெருமை இராணுவத்தினரையே சாரும். இறுதிப் போருக்குத் தலைமை தாங்கியவன் என்ற ரீதியிலும், முன்னாள் இராணுவத் தளபதி என்ற ரீதியிலும் இதை வெளிப்படையாகக் கூற எனக்கு முழு உரித்துண்டு.

 ராஜபக்சக்களுக்கு அருகதை இல்லை

எனவே, ‘போர் வெற்றி நாயகர்கள்’ என்ற மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்சக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

போர் வெற்றியின் பின்னர், ஆட்சியில் இருந்த ராஜபக்சக்கள் தங்கள் சுகபோக அரசியலுக்காக இந்த நாட்டின் வளங்களை விற்று – பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்து இறுதியில் நாட்டையே அழித்தனர். அவர்கள் செய்த இந்த மோசமான செயல்களையடுத்தே அவர்கள் கூண்டோடு அதிகாரத்திலிருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள். அதுமட்டும் போதாது, ராஜபக்சக்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.

அஞ்சும் ரணில்

பெரும் குற்றவாளிகளான ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றார்.

தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தியே ஆட்சிக்கு வரும். அது ராஜபக்சக்களுக்கும் தனக்கும் பாதகமாக அமையும் என்று ரணில் எண்ணுகின்றார்” என்றார்.