பௌர்ணமி அன்று இந்த தீபத்தை ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

பௌர்ணமி என்றாலே நில ஒளியின் பிரகாசம் தான். இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் மிகவும் விசேஷமானது.

செல்வம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும், ஆரோக்கியம் சம்பந்தமான பூஜைகளாக இருக்கட்டும் இந்த நாளில் செய்வது அதிக பலனை கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த நாளில் நம் வாழ்க்கை ஒளிமயமாக இருக்க இந்த தீப வழிபாட்டு முறையை செய்ய வேண்டும். 

வீட்டில் செல்வம் பெருக

பௌர்ணமி வழிபாடு இன்றைய தினம் மாலை 5 மணி வரை தான் பௌர்ணமி இருந்தாலும் கூட சூரிய உதயத்தின் போது எந்த திதி உள்ளதோ அந்த நாள் முழுவதும் அந்த திதி ஆகவே கணக்கில் கொள்ளப்படும்.

ஆகையால் இன்றைய தினம் இந்த பௌர்ணமி தீப வழிபாட்டை செய்யலாம்.

இந்த பௌர்ணமி தினத்தில் சத்தியநாராயண பூஜையும், லலிதா சஹஸ்ரநாமம் பூஜையும் செய்வது மிக மிக விசேஷமான பலனை தரக்கூடியது.

வாய்ப்புள்ளவர்கள் இந்த பூஜையை தொடர்ந்து 16 வாரங்கள் வரை செய்து வரும் போது நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்க்கையை வாழலாம் என்பது ஒரு ஐதீகம்.

வழிபாட்டு முறை

இன்றைய தினம் உங்கள் வீட்டில் பூஜை அறையை முழுவதுமாக சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான வாசனை மிக்க மலர்களால் அவர்களுக்கு பூக்களை வைத்து அலங்காரம் செய்வது முக்கியம்.

அதன் பிறகு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு இனிப்பை செய்து கொள்ளுங்கள்.

முடியாதவர்கள் வெல்லம், கற்கண்டு, உலர் திராட்சை போன்ற எளிமையான பிரசாதத்தை கூட வைக்கலாம்.

பௌர்ணமி பூஜை செய்பவர்கள் மாலையில் எப்போதும் போல் வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி விடுங்கள்.  

16 தீபங்கள் ஏற்றுதல்

நிலவொளி நல்ல பிரகாசமாக வீசும் வேளையில் வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக 16 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

16 அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஏற்றுங்கள்.

இதை செய்ய முடியாதவர்கள் இரண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து ஆறு அகல் விளக்கை மட்டும் ஏற்றுங்கள்.

அதே போல் வீட்டு சாம்பிராணி தூபத்தை காட்டி கொள்ளுங்கள்.

இதை ஏற்றிய பிறகு தாயாரின் படத்திற்கு முன்பாக அமர்ந்து மலர்களால் தாயாருக்கு அர்ச்சனை செய்து அவருடைய நாமத்தை சொல்லி வீட்டில் இருக்கும் வறுமை மாறி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

நெய்வேத்தியத்தை தாயாருக்கு படைத்து வணங்கி இந்த நெய்வேத்தியத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.