மதில் வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு!

முல்லைத்தீவில் இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, சிலாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு, சிலாவத்தையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் சென்றுள்ளனர்.

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை

தூண் போடப்படாத பழைய மதில் அருகில் குழந்தை தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மறுபக்கத்தில் நின்றிருந்த உறவினர் ஒருவர் குழந்தையை மதில் மேலாகத் தூக்குவதற்காக மதிலில் ஒரு காலை ஊன்றியுள்ளார்.

அப்போது மதில் சரிந்து குழந்தை மீது வீழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.