லண்டனில் இருந்து யாழ் வந்த சிறுவன் உயிரிழப்பு!

பிரித்தானிய தலைநகர் லண்டனிலிருந்து உறவினரின் மரண சடங்கிற்காக யாழிற்கு குடும்பத்தினருடன் வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் வடமராட்சி கிழக்கு ஆளியவளை சேர்ந்த உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் மரண சடங்கிற்காக கடந்த 7 ஆம் திகதி தந்தை, தாய், மற்றும் இரு ஆண் பிள்ளைகள் லண்டனில் இருந்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வத்திராயன் வடக்கைச் சேர்ந்த குருபரன், வெண்ணிலா தம்பதிகளும் அவர்களின் 9 வயது மற்றும் 6 வயது மகன்களுமே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி அவர்கள் வருகை தந்த நிலையில், விடிந்தவுடன் தந்தையும் தாயும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

எனினும், இரண்டு சிறுவர்களும் தமது அம்மம்மா, அம்மப்பாவுடன் வத்திராயனில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று கடற்கரை கிராமமான வத்திராயனில் உள்ள அவர்களது பேரன் வீட்டில் சிறுவர்கள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர்.

மாலை வேளையில் அம்மப்பாவுடன் கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.

சுட்டித்தனம் நிறைந்த சிறுவர்கள் இருவரையும் அவர்களது அம்மப்பா பாதுகாப்பாக கடலில் நீராடச்செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் வீட்டு வேலைகளில் அவர் மூழ்கியிருந்த நிலையில், சிறுவர்கள் இருவரும் அங்கு விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

சிறிது நேரத்தின் பின்னர் அவர்களை தேநீர் பருகுவதற்கு அழைத்தபோது, குருபரன், வெண்ணிலா தம்பதிகளின் இரண்டாவது மகனான குருபரன் ஆரிஸ் அங்கு இருக்கவில்லை. பதறிப்போன உறவினர்கள் குறித்த சிறுவனை தேடி அலைந்துள்ளனர்.

இருப்பினும், சிறுவன் கிடைக்கவில்லை. லண்டனில் பிறந்து முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்த அந்த சிறுவனுக்கு அந்த பிரதேசம் எந்தவகையிலும் பரீட்சயமானது அல்ல. ஊரிலுள்ளவர்களையும் அவருக்கு தெரியது.

இந்த நிலையில், உறவினர்கள் ஒன்றிணைந்து தேடும்போது, அண்மையிலுள்ள ஊரான மருதங்கேணி கடற்கரையில் சிறுவன் கடல் நீருடன் அடித்துவரப்பட்டு கிடப்பதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக சிறுவனை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உறவினர்கள் சிறுவனின் கால்தடத்தை அவதானித்தபோது அவர் தனியாக நடந்து கடலுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போதே கடலில் மூழ்கி ஆரிஸ் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

லண்டனில் இருந்து தாய் தந்தையுடன் தமது உறவினர்களையும், சொந்த மண்ணையும் பார்ப்பதற்கு வந்த அந்த பிஞ்சு உயிரை கடல் அன்னை தன்பால் எடுத்துக்கொண்டால். இரண்டு குழந்தையிகளுடன் பல கனவுகளுடன் வந்த அந்த தாய் தந்தை ஒரு குழந்தையை பறிகொடுத்து தவிக்கின்றனர்.

இந்த துயர சம்பவம் பெற்றோர்கள் அனைவரும் தமது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆரிஸ் என்ற இந்த அழகிய குழந்தையின் இழப்பு வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.