சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாகும் இலங்கை பணிப்பெண்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

நுவரெலியாவின் லிந்துலவை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான வீரன் சிவரஞ்சினி என்ற பெண்ணே இவ்வாறு சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் அவர் பணிபுரிந்த இடத்தில் உடலில் ஊசிகளைச் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

சத்திரகிசிச்சை

மருத்துவ பரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியா மாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காலில் இருந்த இரண்டு ஊசிகளை சத்திரகிசிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சிவரஞ்சினி கடந்த ஜூன் 17ஆம் திகதியன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம்  சவூதி அரேபியா சென்றுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே சவூதி அரேபியா செல்வதற்குத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்கொடுமைகளை அனுபவித்தேன்

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் சவூதி அரேபியாவில் அந்த வீட்டிற்குச் சென்ற முதல்நாளில் இருந்து என்னைத் துன்புறுத்தினார்கள். அவர்களுடைய மொழி எனக்கு தெரியாது.

நான் ஒரு வார காலம் அங்கு வேலை பார்த்தேன், பெரும் கொடுமைகளை அனுபவித்தேன், எனது பிள்ளைக்காக அவற்றைச் சகித்துக்கொண்டேன்.

கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக ஏணியில் ஏறியவேளை நான் கீழே விழுந்தேன், தலையில் அடிப்பட்டு மயக்கம் வந்தது.

இதன்போது என்னை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் நான் இலங்கைக்குச் செல்கின்றேன் என தெரிவித்தேன், ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து என்னை அடித்தார்கள்.

பணிபுரியும் இலங்கை பெண்கள் 

அவர்கள் மூன்று வருடங்கள் வேலைபார்ப்பதற்குச் சம்மதம் என தெரிவிக்கும் கடிதத்தில் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற முயன்றனர், நான் மறுத்ததால் அவர்கள் கோபமடைந்து ஊசிகளால் எனது கை கால்களில் குத்தினர், நான் என்னைச் சித்திரவதை செய்யவேண்டாம் என கதறினேன், ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை என சிவரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இலங்கை பேரழிவிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கை பெண்கள் அந்நிய செலாவணிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

அவர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கான பணம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவுகின்றது.

எனினும் இவர்களில் பலருக்கு தங்கள் குடும்பத்தினருக்காகச் சிறந்த வாழ்க்கை என்ற கனவு மிகவும் பயங்கரமானதாக மாறிவிடுகின்றது.

அவர் நவீன கால அடிமைத்தனம் என தெரிவிக்கக்கூடிய சூழ்நிலைகளில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்