யாழில் யாழ்தேவி புகையிரதத்திற்காக அதிகளவில் காத்திருக்கும் மக்கள்

   யாழ். தேவி ரயிலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் யாழ். தேவிக்கே இவ்வாறு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மாஹோ – ஓமந்தை இடையிலான வடக்கு ரயில் பாதையின் 128 கிலோமீற்றர் பகுதியில், தர மேம்படுத்தல் பணி முடிவடைந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம்(ஜூலை 15) முதல் மீண்டும் வடக்குக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக , கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குணசிங்க மேலும் கூறியுள்ளார்.

 நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட சேவை

இதேவேளை, வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்  கந்தசுவாமி  மகோற்சப திருவிழாவை முன்னிட்டு கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்டண விபரம்

அதேவேளை வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் தொலைக்காட்சி வசதிகளுடன் இருக்கும். இதற்காக பயணிகளிடமிருந்து 4 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும்.

மேலும் பயணிகள்  முன்பதிவுக்கு  ரயில்வே இணையத்தளத்தின் ஊடாக  முன்பதிவு செய்யலாம் என கூறப்படும் அதேவேளை பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.