மட்டக்களப்பு பெண்கள் பாடசாலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி சாட்சியளித்துள்ளனர்.

நேற்றைய தினம் (31-07-2023) திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் வழக்கு எடுக்கப்பட்ட போது மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி மூடிய நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட ஆசிரியரை அடையாளம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஏனைய சாட்சிகளை எதிர்வரும் 2 ம் திகதி முன்னிலைமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பித்து வந்த 55 வயதுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் கடந்த 2019 ம் ஒக்டோபர் 19 ம் திகதி 19ம் அங்கு கல்வி கற்று வந்த 7 ம் வகுப்பு மாணிகளின் வகுப்பறையில் கற்பிக்க சென்ற நிலையில் மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை மற்றும் தகாதவார்த்தை பிரயோகம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் செய்த முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மேலதிக விசாரணையின்றி இருந்து வந்துள்ள வழக்கை விசேட விசாரணை எடுத்து விசாரணை செய்யுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டு சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த வழக்கு விசேட விசாரணைக்காக நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து அங்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், அவருக்கு எதிராக சாட்சியப்பதற்காக 29 மாணவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியைகள், அப்போது கடமையாற்றிய அதிபர் உட்பட 40 பேர் சாட்சியமளிக்க முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது ஆசிரியர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகாததையடுத்து சாட்சிகளை சாட்சியமளிக்க ஏற்பாட்டையடுத்து திறந்த நீதிமன்லில் இருந்து வழக்காளிகள் சாட்சிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு மூடிய நீதிமன்றில் 3 மாணவிகள் ஒருஆசிரியர் உட்பட 4 பேர் சாட்சியமளித்தனர்.

அதில் சாட்சியமளித்த 3 மாணவிகள் தற்போது சாதாரண கல்வி பொது தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்த கால பகுதியில் மாணவிகளின் முதுகில் கையால் அடிப்பது மற்றும் தகாதவார்தை பிரயோகம் கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பிப்பது உடலில் தொட்டு பேசி பாலியல் சேட்டை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக வகுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சாட்சியமளித்ததுடன் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை அடையாளம் காட்டினர்.

இதையடுத்து, வகுப்பறை ஆசிரியர் சாட்சியளிக்கும் போது அந்த கால பகுதியில் குறித்த வகுப்பறை ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ள போது மாணவிகள் ஆங்கில ஆசிரியர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாகவும் கையால் முதுகில் அடிப்பதாகவும் வாடி போடி என பேசுவதாகவும் அவரை மாற்றுமாறும் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனை தொடாந்து அவர் கையால் அடிக்க கூடாது என பிரம்பு வாங்கி கொடுத்தும் அவர் கையால் அடித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதி அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் அதிபர் என்னிடம் விசாரித்த போது நடந்தவைகளை தெரிவித்ததையடுத்து பாடசாலை ஆசிரியர் ஒழுக்க குழுவைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் குறித்த வகுப்பறைக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை செய்து அறிக்கை தயாரித்து சென்றனர் என சாட்சியளித்து அசிரியரை அடையாளம் காட்டினர்.

சாட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த ஆசிரியரிடம் குறுக்கு விசாரணை செய்த போது அதற்கு அவர் எதுவித பதிலும் அளிக்காது மௌனமாக இருந்துள்ள நிலையில் ஏனைய சாட்சிகள் எதிர்வரும் 2ம் திகதி சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறும் என அறித்ததையடுத்து மூடிய நீதிமன்றம் கலைந்தது.