பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு!

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. 

இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

 இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது.

இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. 

பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. 

இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.