வவுனியா வைத்தியசாலை விவகாரம் மூவர் கொண்ட விசாரணைக்குழு நியமனம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை பேற்றிற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவருடன் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் முரண்பட்ட நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் குறித்த முரண்பாடு தொடர்ந்து நிலையில் அவ்விடயம் தொடர்பாக குழந்தையின் தந்தையால் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வவுனியா சுகாதார வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆளுனரின் ஆலோசனைக்கமைய வட மாகாண சுகாதார பணிப்பாளர் இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையில் கலந்துரையாடியதுடன் மூவர் கொண்ட குழுவும் விசாரணைக்காக நியமித்துள்ளார்.