எச்சரிக்கை விடுத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சாணக்யன்

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை, சிறைபிடித்த பிக்கு உள்ளிட்ட குழுவினர் தனது சொல்லி அங்கு சென்றவர்களுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததாக சாணக்கியன் மேலும் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் பிக்குகளுக்கும் அவரை சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு ICTR – International Criminal Law and Hate Speech சட்டம் மூலம் குறித்த பிக்கு கைது செய்யப்பட வேண்டும்.

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஓர் நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே.

இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எம்மால் இயன்ற அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம்.

பிக்கு சொல்வதை போன்று எமது மக்களின் இவ்வாறான பிரச்சினைக்கு தமிழரசுக் கட்சியும் நானுமே அழுத்தம் கொடுத்து வருகின்றோம். எனினும் குறிப்பாக அரச சார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மௌனம் இந்த விடயத்தில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மைலத்தமடு பிரதேசத்தில் பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம்(22.08.2023) சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.