தமிழர் கரங்களை விட்டு செல்லும் ஆனையிறவு உப்பளம்

தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு ‘ஆனையிறவு உப்பளம்’ மற்றொரு உதாரணம்.

ஒரு காலத்தில் இலங்கை முழுவதற்குமான உப்புத் தேவையைப் பூர்த்தி செய்துவந்த ஒரு உப்பளம், பல்வேறு இரசாயனப்பொருட்களும், இரசாயன மூலப்பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்த அந்த உப்பளம், இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கான செயற்பாட்டுடன் முடங்கிக் கிடக்கின்றதைப் பார்க்கின்ற போது ஒவ்வொரு தமிழ் மகனினதும் மனங்கள் வலிக்கத்தான் செய்யும்.

காரணம் என்ன தெரியுமா?

முதலாவது காரணம் அனைவரும் அறிந்த ஒரு காரணம் தான்.

மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரசாங்கம் இந்த உப்பளத்தை அணுகுவது.

இரண்டாவது, உப்பளத்தில் பணியாற்ற இளைஞர்கள் முன்வராத காரணம்.

பெரும்போக உப்பு அறுவடையாகிறது

ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இப்போது உப்பு பெரும்போக காலமாகும். கடந்த சில தினங்களாக மழையினால் தாமதமான உப்பு அறுவடை துரிதமாக நடைபெறுவதாகவும், ஆனையிறவில் உற்பத்தியாகும் உப்புக்கள் உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுவதாக உப்பள முகாமையாளர் தெரிவித்தார்.

“என்ன வளம் இல்லை எங்கள் நாட்டில். ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” கேள்வி கேட்டுவிட தோன்றுகிறது.

பெருவளங்களில் ஒன்றாகிய கடல் வளத்தைக் கொண்டு உப்பும் அது சார்ந்த உற்பத்திகளும் பயன்பாடும் பெரும் வரமே!

வீதியோரத்திலும் உப்பு பிஞ்சாகிறது

ஆனையிறவு A9 வீதியின் 265 KM கல்லடியில் வீதிக்கும் தொடருந்து பாதைக்கும் இடையில் தேங்கிய கடல் நீர் கடும் வெப்பத்தினால் உப்பாகிக் கொண்டிருக்கிறது.

‘பிஞ்சுப்பூ’ என்ற பதநிலையில் உப்பு பூத்துக்கொண்டிருக்கின்றது. சில தினங்களில் விளைந்து பாறையாகிவிடும்.

ஆனையிறவு உப்பளத்தில் விளைந்த உப்புக்களை வெட்டி உப்புமனை இடும் இவ்வேளையில் வீதியோரத்தில் தேங்கிய கடல் நீர் உப்பாகி வருகிறது.

ஒரு சில சென்டிமீட்டர் உயரம் வரை உப்பு பாளங்கள் தோன்றுவதை அவதானிக்கலாம்.

இந்த உப்புக்கான கடல்நீர் உப்பளத்தின் ஈற்றுப் பாத்தி நிரம்பிய போது வழிந்து வெளியேறிய நீரால் பூத்து காய்க்கிறது.

எனினும் இந்த சிறுதேக்க உப்புப்பாளங்கள் உணவுப் பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இருக்காது.

உப்பு உடைக்கும் தொழிற்சாலை வசதியில்லை

கிளாலி கடல் நீரேரி யில் இருந்து நீரைப் பெற்று நிகழும் ஆனையிறவு உப்பள உப்பு உற்பத்தியின் செயன்முறையினை அங்கு பணியாற்றும் தொழில் மேற்பார்வையாளர் இடம் கேட்டபோது புரிந்து கொள்ளுமளவில் விளக்கினார்.

‘இப்போது சோடியம் குளோரைட் மட்டுமே உற்பத்தியாவதாகவும் அதுவும் புத்தளம் உப்புத்தொழிற்சாலைக்கே சுத்திகரிப்பதற்காகவும் உடைத்து பொதியிடுவதற்காகவும் கொண்டு செல்லப்படுகின்றது.

ஆனையிறவில் விளையும் உப்பே இலங்கையில் தரமான நல்ல உப்பு ஆகும்.

ஆயினும் அதனை உடைத்து பொதியிடும் தொழிற்சாலை வசதி ஆனையிறவில் இல்லை எனவும் கூறியிருந்தார். எதிர்காலத்தில் இத் தொழிற்சாலை வசதி ஆனையிறவிற்கு கிடைக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது.

வேலையாட்கள் பற்றாக்குறை

ஆனையிறவு உப்பளத்தில் நூற்றைம்பது ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சிலர் ஆறு வருடங்களுக்கு மேலாகவும் பணியில் உள்ளனர்.

சிலர் சில நாட்கள் வேலையின் பின் பணிவிலகி விடுகின்றனர் எனவும் இருநூறு பணியாளர்கள் தேவையென மற்றொரு வேலை மேற்பார்வை அதிகாரி கூறினார்.

உப்பளம் மேலும் அபிவிருத்தியடைந்து பாத்திகள் அதிகரிப்பதால் வேலையாட்கள் இன்னும் அதிகமாக இனிவரும் காலங்களில் தேவைப்படுவார்கள் என்றார்.

பணியில் உள்ள ஊழியர்கள் அறுவடைகாலங்களில் உப்பு அறுவடையின் ஈடுபடுவதும் ஏனைய காலங்களில் உப்பு ஏற்றும் பணியிலும் ஈடுபடுகின்றனர். பாலின வேறுபாடின்றி ஊழியர்கள் உப்பளத்தில் பணியாற்றுவதைக் காணலாம்.

உப்பு உற்பத்தி செயன்முறை

உப்பளங்களில் பாத்திப் படிமுறைகளினூடாக கடல் நீரில் உள்ள மனித உணவுத் தேவைக்கு பொருத்தமில்லாத உப்புக்கள் கழிவாக வடிக்கப்பட்டுகின்றன.

இத்தகைய வடிகட்டல்களின் மூலம் கல்சியம் சல்பேற்று (CaSO⁴)இ கல்சியம் காபனேற்று(CaCO³) போன்ற உப்புக்கள் பாத்திகளில் வீழ்படிவாகி பளிங்கு போன்ற பாறைகளாகின்றன.

இறுதியாக உள்ள உப்புப் பத்தியில் மனித உணவுத் தேவைக்கு பெரிதும் பயன்படும் சோடியம் குளோரைட்டு(NaSO⁴) வீழ்படிவாகிறது.

இப்போது இலங்கையில் கடும் வறட்சி நிலவி வருகின்ற வேளையில் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை நிகழ்கின்றது.

அறுவடையினால் கிடைக்கும் உப்புக்கள் மனையிடப்பட்டு காடுகளில் வேயப்படும். ஆறுமாதங்களாக மனையிடலில் பேணப்பட்டும். இதனால் வெட்டப்பட்ட சோடியம் குளோரைட்டுடன் கலந்திருந்த மக்னீசியம் குளோரைட்டு (MgCl²), மக்னீசியம் சல்பேற்று(MgSO⁴) போன்ற மக்னீசியம் சேர்வைகள் வழியில் உள்ள நீராவியை உறிஞ்சி நீர்க்கசிவுக்குள்ளாகி உப்புமனையின் அடிப்பகுதிக்கு வீழ்படிவாகிச் சேரும்.

குறைந்தளவு மாசுள்ள சோடியம்குளோரைட்டு (கறிப்புபாகிய சோடியம் குளோரைட்டு சிறிதளவில் மக்னீசியம் குளோரைட்டு போன்ற மக்னீசியம் சேர்வைகளை உள்ளடக்கியிருக்கும்.

இதனாலேயே வளியில் திறந்து வைக்கும் பொது மேசை உப்பெனவும் அழைக்கப்படும் சோடியம் குளோரைட்டு நீர்க் கரைசலுக்குள்ளாகிறது.

மனிதப் பயன்பாட்டுக் கேற்றவகையில் மாற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

இலங்கையின் ஆனையிறவு உப்பை மூலப்பொருளாக கொண்டு தொழிற்பட்ட இரசாயனத் தொழிற்சாலை தான் பரந்தன் இரசாயனத்தொழிற்சாலையாகும்.

எனினும் இது இப்போது தொழிற்படுவதில்லை.

இந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் சோடியம் ஐதரொட்சைட்டு(NaOH), ஐதரோக்குளோரிக்கமிலம்(HCl) போன்ற இரசாயனப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இந்த இரசாயனத் தொழிற்சாலை இல்லாததால் இப்போது கல்சியம் சல்பேற்று போன்ற உப்புக்கள் உற்பத்தி செய்வதில்லை என உப்பள அதிகாரிகளிடம் கேட்ட போது தெரிவித்தனர்.

இதனால் தொலமைற்று, அப்பற்றைற்று, ஜிப்சம் போன்ற இரசானப் பொருட்கள் உற்பத்தி இல்லாது போகின்றது.

தமிழர் தாயகப் பகுதியில் உள்ள மூடப்பட்ட பல தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று.

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையும் காங்கேசன்துறை சீமெந்துச் தொழிற்சாலையும் இவ்வாறு இப்போது தொழிற்பாடற்றுக் கிடக்கின்றன.

சூழல் நேயத் தன்மையோடு இத்தகைய தொழிற்சாலைகள் மீளவும் இயங்கும் போது இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் மேம்படுவதோடு; உள்ளூர் தேவைக்கான இறக்குமதியும் குறையும்.

இழக்கப்படும் அந்நியச் செலாவணியை பெருக்கி வளரும் வளர்ந்த பொருளாதார நாடாக இலங்கை மாறிட உதவும்.

உள்ளூர் மக்களுக்கான வேலையில்லா நிலைமைகளும் மாற்றியமைக்கப்படும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் முதலீடுகளை செய்யும் போது இவை பற்றியும் சிந்தனை செய்யலாம்.