முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் அமர்ந்திருந்த 2 பிள்ளைகளின் தாயார் பலி !

முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த குடும்பப் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் 28-08-2023) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த 25ஆம் திகதி புதுக்குடியிருப்பிலிருந்து தேவிபுரத்தில் உள்ள வீட்டிற்கு, தனது மச்சானுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயன்றவேளை, மோட்டார் சைக்கிளின் கைபிடி முச்சக்கர வண்டியில் தட்டுப்பட்டது.

இதன்போது அவர்கள் இருவரும் கீழே விழுந்தபோது குறித்த பெண் சம்பவ இடத்தில் மயக்கமுற்றார்.

இதையடுத்து, அந்த பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, இறுதியாக 25ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் (28) அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 28 வயதான சுஜீவன் வசந்தமலர் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.