சர்வதேச கடல் எல்லையில் இலங்கையர் உட்பட 12 பேர் கைது!

இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில் கடத்தி வரப்பட்ட இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று (23) மாலை சுங்கத்துறையினர் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சர்வதேச கடல் எல்லையில் இருந்து 12 நாட்டில்கள் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இலங்கை, புத்தளம் பகுதியை சேர்ந்த 4 மீன்பிடி படகுகளையும் அதிலிருந்த 8 இலங்கை நபர்களிடம் இந்திய கடலோர காவல் படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபம் அழைத்து வந்து கொண்டிருந்த போது நடுக்கடலில் மண்டபம் மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த நாட்டு படகை பிடித்து சோதனை செய்த போது படகில் 35 மூட்டைகளில் 594 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த படகையும் அதிலிருந்த நால்வர் என மொத்தமாக 12 பேரை கைது செய்து மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகளை புத்தளம் மற்றும் கல்பிட்டிக்கு கடத்திச் சென்ற போது பிடிபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடத்தல் பொருட்களை பெற்று செல்வதற்காக 4 படகுகளில் இலங்கை நபர்கள் காத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நால்வரையும் கடத்தல் பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டனர்.

மேலும் இலங்கை சேர்ந்த நான்கு படகையும் அதிலிருந்து எட்டு நபர்களையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்கள் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து மரைன் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கைது செய்யப்பட்ட 08 இலங்கையர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை பெறுவதற்காக காத்திருந் தார்களா? அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தார்களா? என விசாரணை நடைபெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது அவர்கள் மீது கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.