பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த யுவதி உறக்கத்தில் உயிரிழப்பு!

தலத்துஓயா உடுவெல பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மொனராகலையைச் சேர்ந்த 22 வயதான சந்துனி ஹன்சமலி பண்டார என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவ்வப்போது சலி காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும், அவருக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

உறக்கத்தில் மரணம்

மகளும் தாயும் மட்டுமே சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். தந்தை தொழிலுக்காக வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகளிடம் அசைவுகள் இல்லாதமையால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இறந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் நுழையப் போவதாகவும், அதற்கான ஆடைகளையும் தயார் செய்ததாகவும் தாய் குறிப்பிட்டார்.

மூளையில் இரத்தம்

இம்மாணவியின் பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.