நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில்  4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை, பலுகஸ்வெவ – உடகடவல வீதியின் உடகடவல பிரதேசத்தில் வீதியைக் கடந்த மயில் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி மயிலின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உடகடவல, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை – பண்டாரகம வீதியில்  வேவிட, பிடவான பாலத்திற்கு அருகில் லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் பயணித்த இரண்டு குழந்தைகளும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம, கிம்மன்துடாவ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – மாபலகம வீதியில் நாகொட வைத்தியசாலைக்கு அருகில், ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்  பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த 73 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குளியாப்பிட்டி – ஹெட்டிபொல வீதியின் கரந்திப்பல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.