சுங்க திணைக்கள வருமானத்தில் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களம், 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970 பில்லியன் ரூபா (97,000 கோடி ரூபா) பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய வருமானமாகும்.

மேலும், இந்த தொகையானது, 2022ஆம் ஆண்டின் வருமானத்தை விட 138%ஆல் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட இலக்கு

கடந்த வருடம் தொடங்கிய போது, சுங்கத் திணைக்களத்தின் வருடாந்த வருமான இலக்காக 1,217 பில்லியன் ரூபாவை நிதி அமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும், கடந்த வருடத்தில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இந்த தொகையானது 893 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து, குறிக்கப்பட்ட இலக்கை அடைந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் இதற்கு முந்தைய ஆகக்கூடிய வருமானமாக 2018ஆம் ஆண்டு பெறப்பட்ட 923 பில்லியன் ரூபா இருந்தமை குறிப்பிடத்தக்கது.