அதிகாலை வாகன விபத்தில் நால்வர் பலி!

தமிழகம் – தஞ்சாவூர் அருகில் இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மூணாவயல் பகுதியைச் சேர்ந்த 11 பேர் வேனில் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் பகுதியில் சாரதி எதிர்பாராதவிதமாக தூங்கியதை அடுத்து வீதியோரமாக இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து படுகாயமடைந்த ஏழு பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணை செய்து வருகின்றனர்.