இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் எதிர்வரும் மாதம் இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில்  இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள கௌரவ அதிதியாக பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதையும் பார்வையிட உள்ளார். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சருமான பும்தம் வெச்சயாச்சாய் மற்றும் இலங்கையின் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் கைச்சாத்திடுவர். 

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதற்கும், ஆசியான் பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்து, இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினம் மற்றும்  ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் சர்வதேச வர்த்தக மேம்பாட்டுத் திணைக்களம் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படவுள்ள இலங்கை – தாய்லாந்து வர்த்தக மன்றமும் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

தாய்லாந்து பிரதமருடன், துணைப் பிரதமர் பும்தம் வெச்சயச்சாய் மற்றும் வர்த்தக அமைச்சர் மாண்புமிகு ஜக்கபோங் சங்மானி, தாய்லாந்தின் வெளிவிவகார துணை அமைச்சர் மற்றும் உயர்மட்ட வணிகக் குழுவினர் உள்ளிட்ட 39 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.