இலங்கைக்கு மீண்டும் கடனுதவி!

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வைப்புத்தொகை காப்புறுதி திட்டம்

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிதித் துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த இந்த திட்டம் பங்களிக்கும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கை வைப்பு காப்புறுதித் திட்டத்தின் நிதி மற்றும் நிறுவனத் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.