யாழில் கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்பு பேரணி!

யாழில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பேரணியானது இன்று(09.02.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமாகி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 

இதன்போது ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று ஆளுநரின் பிரதிச் செயலாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில்  புதிதாக உருவாக்கப்பட்ட கடற்றொழிலாளர் சட்ட வரைபை நிராகரித்தல், வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல், வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது, வெளிநாட்டு படகுகளில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரல், கடற்றொழிலாழர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு பேரணியில் ஊர்காவற்துறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர் அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர், ஜே.ஜோகராஜ் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.