பிரபல போதை வியாபாரி உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை நேற்று (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சம்பவதினமான அதிகாலை 4 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு போதை பொருளுக்கு அடிமையான இருவர் பிரபல வியாபாரியிடம் போதை பொருள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற வியாபாரி, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்காணிப்பில் மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதன்போது வியாபாரியிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதை பொருளையும், ஏனைய இருவரிடம் இருந்து ஒன்றரை கிராம் மற்றும் 200 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள்களையும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.