முல்லைத்தீவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும், அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறியள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

கைது நடவடிக்கை
இந்நிலையில், புதையல் தோண்டிய 4பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வைகோ இயந்திரம், டிப்பர் ரக வாகனம், என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, மேற்கொண்ட விசாரணைகளின் போது புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இருவரும், ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஒருவரும், கைவேலி பகுதியை சேர்ந்த ஒருவருமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45,42,31,30 வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இதன்படி விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.