திருமண வரம் அருளும் துர்க்கை வழிபாடு

  துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது.

அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கை அம்மனை பூஜிக்க உகந்த காலம் ராகு காலம் ஆகும் .

ராகு கால துர்க்கை வழிபாடு

ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. மூன்றே முக்கால் நாழிகை என்பதை ஒரு முகூர்த்த காலம் என்பார்கள். ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள்.

ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை.

ராகு கால துர்க்கா பூஜை’ என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது. இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை.

இதற்குரிய தெய்வம் (துர்கா தேவி) ‘மங்கல சண்டிகா’. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத் தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது.

ஒன்பது வாரங்கள் விரதமிருந்து வழிபாடு
பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும் இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜை முறைகள் இருக்கிறது. ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை.

எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப் திருப்பிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம்.

ஆகவேதான் செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்றவற்றிற்கும் இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.