கனடாவில் வங்கிகளின் வட்டி வீதம் தொடர்பான செய்தி!

 கனடாவில் வட்டி வீதங்களில் மாற்றமில்லை என அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி தற்பொழுது பேணப்பட்டு வரும் வங்கி வட்டி வீதமான ஐந்து வீதம் தொடர்ந்தும் அதே அளவில் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின், பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கொள்கைகள் வகுக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி வட்டி வீதங்களை குறைப்பது தற்போதைக்கு பொருத்தமற்றது என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் நடுப்பகுதி வரையில் பணவீக்கம் சுமார் மூன்று வீதமாக காணப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் அது குறையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 2.9 வீதமாக காணப்பட்டது.

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட மத்திய கிழக்கு போர் பதற்றம், உக்ரைன் – ரஸ்ய போர் போன்ற பல காரணிகளினால் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வட்டி வீதங்களை தற்போதைக்கு திருத்தி அமைப்பது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வங்கி வட்டி வீதம் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.