மது போதையில் சேற்றுக் குழியில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மதுபோதையுடன் ஆற்றில் குளித்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் சேற்றுக் குழியில் மூழ்கி நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று முன்தினம் (08) சிவராத்திரி பூசைக்கு கோயிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு தமது நண்பர்கள் ஐந்து பேருடன் மட்டக்களப்பு சந்தனமடு ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

சேற்றுக் குழி

அங்கு பகலுணவு செய்வதற்குத் தாமதம் ஏற்பட்டதனால் மதுபானம் அருந்திவிட்டு குடும்பஸ்தர்கள் இருவரும் மீண்டும் ஆற்றில் குளித்த வேளை சேற்றுக் குழியில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீரில் மூழ்கிய இருவரையும் தேடும் பணிணில் பொதுமக்கள் ஈடுபட்ட நிலையில் குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து உடலங்கள் மீட்கப்பட்டு சந்திவெளி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸாரும் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தனர்.

இதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவரும் மற்றும் ஒரு குழந்தையின் தந்தையான உழவு இயந்திர சாரதியான 24 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.