கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை

 கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் மாகாணத்தின் பல பகுதிகளில் 45 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் மின்சார வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினமும் பனிமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களின் மின் இணைப்பினை மீள வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.