தன் செல்லப் பிராணிக்காக நீதிமன்றம் சென்ற கனேடிய பெண்!

தன் தந்தை வயதுடைய ஆண் ஒருவருடன் ஆறு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்தார் இளம்பெண் ஒருவர். ஆனால், அந்த நபரோ உயிரிழக்கும் முன் தன் சொத்து முழுவதையும் தன் சகோதரிகளுக்கும், தன் முன்னாள் மனைவிக்கும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இப்போது அவர் தனக்குக் கொடுத்த செல்லப்பிராணிக்காக நீதிமன்றத்துக்கு நடையாக நடக்கிறார் அந்த இளம்பெண்.

கனடாவின் ரொரன்றோவில் வாழும் அலீஷா வர்மா, லியோனார்ட் (Leonard Carvalho) என்னும் நபருடன் ஆறு ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலே இணைந்து வாழ்ந்துவந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, தனது 60ஆவது வயதில் திடீரென லியனார்டோ உயிரிழந்துவிட்டார். அவர் தனது சொத்துக்கள் முழுவதையும் அவருடைய சகோதரிகள் மற்றும் முன்னாள் மனைவிக்கு எழுதிவைத்தது பின்னர் தெரியவந்தது.

ஆறு ஆண்டுகள் உடன் வாழ்ந்தும் அலீஷாவுக்காக லியனார்டோ எதுவும் கொடுக்காமல் விட்டது போக, அவர் அலீஷாவுக்கு வாங்கிக் கொடுத்த செல்லப்பிராணியாகிய நாய் ஒன்றும் தங்களுக்குதான் சொந்தம் என வழக்குத் தொடர்ந்து நாயையும் பறித்துவிட்டார்கள் அவரது சகோதரிகள்

ஆனால், தான் அந்த நாயை தன் சொந்த பிள்ளை போல வளர்த்துவருவதாகக் கூறும் அலீஷா, சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா கொண்டுவந்த சட்டம் ஒன்றை மேற்கோள் காட்டி மீண்டும் மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.

அந்தச் சட்டம், செல்லப்பிராணிகளை பொருட்களைப்போல கருதக்கூடாது, அவற்றை யார் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்களோ, அவர்களிடம் அவற்றை ஒப்படைக்கவேண்டும், அவற்றை வளர்ப்பவர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பிரிப்பது விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதற்கு சமம் என கருதப்படவேண்டும் என கூறும் நிலையில், இம்முறை நீதிமன்றம் யாருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.