பிரேசிலில் டெங்கு தொற்று தீவிரம்!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.

பரிசோதனைகளை மேற்கொள்ள வலியுறுத்து
இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் பிரெசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி 2024 ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.