ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

    அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளியில் மார்ச் 14ஆம் தேதி இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

அரிப்பு போன்ற அலர்ஜி

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான் என சிறுவனின் பெற்றோர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி நடந்த அடுத்த நாள் காலை அந்த சிறுவன் பேச்சு மூச்சற்று வீட்டில் கண்டறியப்பட்டுள்ளார். ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது என அந்த சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள் மோசமானதை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான். அடுத்த நாள் காலையில் பள்ளி செல்லுவதற்காக சிறுவனை பெற்றோர் எழுப்பியபோது அவன் பேச்சுமூச்சற்று இருந்துள்ளான்.

இதை தொடர்ந்து அவன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவனின் மரணத்திற்கு பின் ஹாப்கின்ஸ் கவுண்டி மருத்துவத்துறை மேற்கொண்ட உடற்கூராய்வில் அந்த சிறுவன் அலர்ஜியால் உயிரிழந்தான் என தெரியவந்தது.

இதுகுறித்து அவனது உடலை ஆராய்ந்த மருத்துவர் கூறுகையில்,

“அந்த சிறுவனுக்கு ஸ்ட்ராபெர்ரி அலர்ஜி என இந்த சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. ஹாப்கினஸ் கவுண்டி மருத்துவ துறையின் தலைமை இயக்குநர்,”இப்போது வெளிவந்தது முதற்கட்ட ஆய்வு அறிக்கை. இருப்பினும், இன்னும் சில நாள்களுக்கு ஸ்ட்ராபெர்ரி சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.

சிறுவனுக்கு ஸ்ட்ராபெரி அலர்ஜி இருக்கிறதா இல்லையா என்பது கண்டறியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவத்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,

“தற்போது பொது மருத்துவத்துறை கென்டக்கியின் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை பரிசோதித்து வருகின்றன. இது தற்செயலான சம்பவம் என்றாலும் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக யாரும் தற்போதைக்கு ஸ்ட்ராபெர்ரிகளை உண்ண வேண்டாம்” என தெரிவித்துள்ளது.