ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு பறிபோன உயிர்!

     தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விளையாட்டு வினையானது

கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.

இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.