வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்!

காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு.

இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும்.

புதினா ஊறவைத்த தண்ணீரை குடித்துவந்தால் வயிற்று பிரச்சனைகள் தீரும், குறிப்பாக வயிற்றுப்புண்களை ஆற்றும்.

தொண்டைபுண்ணால் அவதிப்படும் நபர்கள் புதினா கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் புண் ஆறிவிடும்.

பழச்சாறு மோர் பருகும் போது புதினா இலைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

இந்த பதிவில் புதினா- கருவேப்பிலை சேர்த்து துவையல் அரைப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்.

நன்மைகள்

  • கொழுப்பு பொருட்கள் எளிதில் ஜீரணம் ஆகின்றன.
  • பசியை தூண்டும் சக்தி உண்டாகிறது.
  • உடலுக்கு போதிய சூட்டினை உண்டாக்கும்.
  • நரம்பு திசுக்களுக்கு வலுவூட்டும்.
  • கண் பார்வை தெளிவுறும்.

யார் சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் இளம் வயதுள்ள சிறுவர் சிறுமியர்கள், செரிமானம் குறைவாக உள்ளவர்கள், கை- கால் இசிவுடையவர்கள், நரம்பு தளர்ச்சி உடையவர்கள், கண்பார்வை குறைவுள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

துவையல் அரைத்தவுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தாளித்துவிட்டு ருசிப்பதால் பலன்களை அப்படியே பெறலாம்.

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு(2 டீஸ்பூன்) மற்றும் கருவேப்பிலை(சிறிதளவு) சேர்க்கவும்.

இதனுடன் மிளகாய் வற்றல்(4), பூண்டு பல்(4) சேர்க்கவும், பின்னர் பெரிய வெங்காயம்(கால் கப்) சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி(ஒரு கப்) மற்றும் உப்பு சேர்க்கவும்.

கடைசியாக புதினா(ஒரு கைப்பிடி) சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கிய பின் இறக்கி விடவும்.

ஆறிய பின்னர் அரைத்து எடுத்தால் சுவையான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா துவையல் தயார்!!!