வவுனியாவில் கஞ்சா போதைப் பொருளுடன் மூவர் கைது!

வவுனியாவில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் 03 ஆம் திகதி கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த காரை வழிமறித்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த காரினுள் 9 கிலோகிராம் கஞ்சா மற்றும் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 27, 25 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.