வெள்ளவத்தையில் தற்கொலைக்கு முயன்ற இலண்டன் வாழ் கோடீஸ்வர வர்த்தகர்

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

குறித்த வர்த்தகர் கடந்த வருட இறுதியில் இருந்து இலங்கையில் தங்கியுள்ளார்.

தங்கியிருந்த காலப்பகுதியில் 4 தடவைக்கு மேல் லண்டனிலிருந்து 12 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான மதிப்பான பவுண்ஸ்களை மாற்றியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தற்போது தற்கொலைக்கு முயன்ற பின்னரே இது தொடர்பாக வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான பங்களாவிலேயே வர்த்தகர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த வர்த்தகர் 18 நாட்கள் தங்குவதாக தெரிவித்தே அவர் இலங்கைக்கு சென்றதாக அவரது மனைவி கூறினார்.

இருந்தும் தான் மேலும் சில நாட்கள் இலங்கையில் தங்க வேண்டியுள்ளதாகவும் தனது நண்பனுடன் சேர்ந்து கம்பனி ஒன்று ஆரம்பிக்க உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் லண்டனிலிருந்து பணம் பெற்றுள்ளார்.

தனது வீட்டுக்கு வந்து தங்கியுள்ள நேரத்தில் பல தடவைகள் தனது வீட்டு சமையல்காரர் மற்றும் பாதுகாவலரை விடுமுறையில் அனுப்பி தனியே அங்கு தங்கியுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பாதுகாவலர் வந்த போது வீட்டின் சோபா செற்றியில் மயக்க நிலையில் கிடந்த வர்த்தகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரியவருகின்றது.

அதன் பின்னரே குறித்த வர்த்தகர் துாக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விடயம் தெரியவந்துள்ளது.

வர்த்தகர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தங்கியிருந்த வேளை அங்கு 13 வயது மதிக்கத்தக்க சிறுமியும் நடுத்தர வயதானவர்களும் வீட்டுக்குள் சென்று வந்துள்ளது சிசிரிவி கமரா மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது வர்த்தகரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வர்த்தகர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தொடர்பில் கடுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக வர்த்தகரின் நண்பர்கள் மூலமாக பொலிசார் சிலரும் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

எனினும் இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் பொலிஸாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதுடன் எந்த வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விபரமும் இரகசியமாகப் பேணப்படுவதாக தெரியவருகின்றது.