வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

வவுனியாவில் பழுதடைந்த மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியா நகரப்பகுதிகளிலுள்ள வரத்தக நிலையங்கயில் சுகாதார பரிசோதகர்களால் இன்று (08.04.2024) சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பழுதடைந்த பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகள் பொறிக்கப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 8 பேருக்கு எதிராக முதற்கட்டமாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு
இதற்கமைய, 6 பேருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், மற்றுமொருவருக்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது, வைரவபுளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். 

அத்துடன், பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு பாதுகாப்பானதும், சுகாதாரமானதுமான பொருட்களை வழங்கும் பொருட்டு சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.