தேர்தலில் இருந்து விலக தயார் சீமான் அதிரடி!

இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தலில் இருந்து விலக தயார்
அப்போது பேசிய அவர், “10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக செய்த ஒரே ஒரு சாதனையை சொன்னால் நாங்கள் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பாஜக என்னுடைய வாழ்நாளில் பாதி நாளை தின்னுவிட்டீர்கள்.

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது 20 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் மோடி ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி விட்டால் நாம் தமிழர் கட்சி தேர்தலில் இருந்து விலகிவிடும்.

எல்லாவற்றிலும் நாம் புதியது தேடும் போது உதய சூரியன், இரட்டை இலையை தூக்கி வீசி விட்டு மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இந்தியம் பேசி, திராவிடம் பேசி என்னிடத்தில் வளத்தை கெடுத்து மக்களின் நலத்தை நாசமாக்கி, லஞ்சத்திலே ஊறி திளைத்தவர்கள் இதையெல்லாம் தடுக்க ஒரு அரசியல் புரட்சி படை உருவாகி வருகிறது என்று நடுங்குகிறார்கள்” என்றார்.