வெளிநாட்டிற்கு அனுப்புவதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து, கொழும்பில் தலைமறைவாகி இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.

கைது நடவடிக்கை
மோசடி தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை குறித்த பெண் கொழும்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் கொழும்பு காவல்துறையினருக்கு அறிவித்து, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

கொழும்பிலும் அப்பெண் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா.. என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண காவல்துறையினரிடம் அவரை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.